சிவபெருமானும் ஆதிநாதரும்
சைவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். சமணர்களின் முதற் கடவுள்
ஆதிநாதர். இந்திய சமய வரலாற்றில் வேறெந்த கடவுளர்களுக்கும் இல்லாத
ஒற்றுமைகள் இந்த இரு கடவுளுக்கும் இருக்கின்றன. இச்சிறு கட்டுரையின்
நோக்கம் இந்த இரு கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஒப்பு
நோக்கிப் பார்ப்பதுதான். இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. முன்னமே
நிறைய அறிஞர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். மயிலை. சீனி.
வேங்கடசாமி அவர்களும் "சமணமும் தமிழும்" என்ற தம் நூலில்
கூறியிருக்கிறார். இங்கு அதையே மேலும் விரித்து விளக்கிக் கூற
முயன்றிருக்கிறேன். நிறைய வலைஞர்களுக்கும், வலையுலா
வருபவர்களுக்கும் இது புது கருத்தாகவும்,
செய்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
ஒற்றுமைகள்:
1. சிவபெருமான்: சைவர்களின் முழுமுதற் கடவுள்.
பகவான் ஆதிநாதர்: சமணர்களின் முதற் தீர்த்தங்கரர் (கடவுள்).
2. சிவன்: இவரை "பிறவாயாக்கை பெரியோன்" என்றழைப்பர். யார்
வயிற்றிலும் பிறவாமல் தோன்றிய தலைவன் என்பது கருத்து.
ஆதிநாதர்: இவருக்கும் இப்பெயர் பொருந்தும். இவர் நம்மை போன்று
மனிதனாகப் பிறந்து, இருவினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும்
பிறவாத நிலையடைந்ததால், பிறவா யாக்கை பெரியோன் என்று
போற்றப்பட்டார்.
3. சிவன்: இவருக்கு இரண்டு மகன்கள். விநாயகன் மற்றும் முருகன்.
ஆதிநாதர்: இவருக்கும் இரண்டு மகன்கள். பரதன் மற்றும் பாகுபலி.
4. சிவன்: ஒரு பழத்துக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.
ஆதிநாதர்: அரசாட்சிப்பதவிக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.
5. சிவன்: இச்சண்டையில், இளைய மகனான முருகன் கோபித்துக்
கொண்டு, ஆண்டியாக சென்றான். (பழனியாண்டி)
ஆதிநாதர்: இச்சண்டையில், இளைய மகனான பாகுபலி, தன் அண்ணனிடமே
சண்டையிட்டதை நினைத்து மனம் வெறுத்துப்போய், முற்றும் துறந்து ஆண்டியாக
சென்றான். (கோமடேசுவரர் அல்லது பாகுபலி, சிரவணபெளிகுளம்)
6. சிவன். இவர் சடா முடியுடன் தோற்றமளிப்பதால், கேசவன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆதிநாதர்: இவர் நீண்ட காலங்கள் தொடர்ந்து தவம் இயற்றியதால், முடி வளர்ந்து,
சடைமுடிக் கொண்டவராகக் காட்சியளித்ததால், இவருக்கும் இப்பெயர் அமைந்தது.
"ஆலநெடு நிழலமந்தனை
காலம் மூன்றும் கடந்தானை
தாழ்சடை முடிசென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை" - திருக்கலம்பகம்
7. சிவன்: சிவனின் இருப்பிடம் கயிலாயமலை.
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறடைந்ததும் திருகயிலாயமலை என்ற இதே
இடத்தில்தான்.
8. சிவன்: சைவர்களுக்கு 'சிவராத்திரி" மிக முக்கியமான நாள்.
(ஏன் என்று தெரியாது?)
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளை, சமணர்கள் "சிவராத்திரி"யாகக்
கொண்டாடுகிறார்கள்.
9. சிவன்: சிவனுடைய வாகனம் எருது.
ஆதிநாதர்: ஆதிநாதருடைய "இலஞ்சினம்" (சின்னம்) எருது. எருது அறத்தின்
சின்னமாக கருதப்படுகிறது. ஆதிநாதரே, உலகிற்கு அறத்தைப் போதித்தவர்.
இல்லறம், துறவறம் என்று பிரித்து அறம் உரைத்தவரும் இவரே. ஆதலால்,
இவர் சிலையின் அடியில் எருது சின்னத்தைப் பொறித்து வைத்தனர் சமணர்கள்.
10.சிவன்: இவருடைய பரிவாரத் தெய்வங்களில் "நந்திதேவர்" முதன்மையானவர்.
ஆதிநாதர்: இவருடைய பரிவாரத் (சாசன) தெய்வங்களில் முதன்மையானவர்
கோமுகயட்சன்.
11.சிவன்: இவர் காலனை உதைத்தார். அதாவது எமனை வென்றவர்
என்பது கருத்து.
ஆதிநாதர்: காலன் இறப்புக்கு உருவகம். இறப்பையும், பிறப்பையும் கடந்தவர்
ஆதலால், காலைனை கடிந்தவர் ஆனார்.
"கன்று காலனைக் கடிந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்!" - நீலகேசி
12.சிவன்: சிவபெருமான் காமனை (காமத்தை)எறித்தவர்.
ஆதிநாதர்: காம உணர்ச்சி காமனுக்கு (மன்மதன்) உருவகம். ஆதிநாதர்
மோகனீயக் கருமத்தை வென்றவர்.
"களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப" - சீவக சிந்தாமணி
13.சிவன்: இவர் முப்புரத்தை எரித்தார். மூன்று கோட்டைகளை அழித்தார்
என்றும் மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்தார் என்றும்
சொல்லப்படுகிறது. எங்ஙனமெனில், இவர் இயற்கையாகவே இந்த மூன்றும்
இல்லாதவர். பக்தர் பொருட்டு, அம்மூன்று மலங்களையும் அழித்தவர்.
ஆதிநாதர்: இவரும் முப்புரத்தை எரித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது
காமம், வெகுளி, மயக்கம் என்ற குணங்களை தன்னிடம் வராமல் தடுத்து
வென்றவர் என்பது கருத்து.
"ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா' - சிலப்பதிகாரம்
14.சிவன்: இவர் மனைவியாகிய உமையாளுக்கு தன் உடம்பில் பாதியைக்
கொடுத்தவர். ஆதலால், "அர்த்தநாரீஸ்வரர்" எனப்பட்டார்.
ஆதிநாதர்: இவருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" என்ற திருநாமம் உண்டு.
சமணத்தில். கல்வியையும், அறிவையும் (இருவினைகளை அகற்றியதனால்
பெறப்படும் அறிவு. வாலறிவு என்றும் கேவல ஞானம் என்றும் அழைப்பர்),
மோட்சத்தையும் (நிர்வாணம்) பெண்களாக உருவகிப்பார்கள். ஆதிபகவன்,
இருவகை வினைகளையும் வென்று, கேவல ஞானம் (அறிவு) என்னும்
அரசியைப் பெற்றதனால் (மணந்ததினால்), "அர்த்தநாரீஸ்வரர்"
என்றழைக்கப்பட்டார்.
"பிரச நாள்மலர்ப் பிண்டியிற் கண்டபே ரமுதே
பிறங்கு பேரொளிக் கேவலத் தரசியைப் பிரியா
அரச னேதிரு நறுங்கொண்டை வடதிரு மலைமேல்
அப்ப னேஅடி யேனையும் அஞ்சல்என் றருளே" - திருநறுங்கொண்டைப் பதிகம்
15.சிவன்: இவருக்கு இரண்டு கண்கள் தவிர நெற்றியில் மற்றொரு கண்
அமைந்ததினால், "முக்கண்ணன்" என்று போற்றப் பெற்றார்.
ஆதிநாதர்: இவர் வாலறிவு (கேவல ஞானம்) பெற்றதனால், அறிவை
கண்ணுக்கு உருவகப்படுத்தி "முக்கண்ணன்" என்று அழைக்கப்பட்டார்.
இவருக்கு ஊனக் கண்கள் இரண்டு, அறிவுக் கண் ஒன்று; மொத்தம்
மூன்று கண்கள்.
16.சிவன்: திரிசூலம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பவர்.
ஆதிநாதர்: சமணர்கள் மூன்று இரத்தினங்களைப் போற்றுவர். அவை
"திரைரத்னா" என்று வடமொழியில் அழைக்கப்படும். அவை நற்காட்சி,
நல்லறிவு, நல்லொழுக்கம் என்பனவாம். பிராகிருத மொழியில் சூல்
என்பதற்கு மணி என்ற பொருளும் உண்டு. ஆதலால், இவருக்கு
மூன்று இரத்தினங்களைத் தரித்தவர் என்ற கருத்தில் திரிசூலம் காட்டப்படும்.
17.சிவன்: இவரிடம் இருந்தே "ஓங்காரம்" என்ற ஒலி பிறந்ததாகவும்,
அதிலிருந்தே எழுத்துக்கள் தோன்றின என்பார் பாணினி.
ஆதிநாதர்: இவர் தம் மகள்களான பிரம்மி, சுந்தரி என்பவர்களுக்கு
எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். பிரம்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு
எண்ணையும் கற்பித்தார் என மகாபுராணம் கூறும். தமிழில் சூடாமணி
நிகண்டு பின்வருமாறு கூறுகிறது.
"எண்ணோடு எழத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி" - சூடாமணி நிகண்டு.
தற்கால எழுத்துக்கள் எல்லாம் பிரம்மி என்னும் எழுத்துருவை அடிப்படையாகக்
கொண்டது என்பது சிந்திதற்பாலது. ஒரு கொசுறுச் செய்தி - எழுத்துக்கள்
வலப்பக்கத்தில் இருந்தும், எண்கள் இடப்பக்கத்தில் இருந்தும் தொடங்கவேண்டும்
என்று ஆதிநாதர் தம் மகள்களுக்கு அறிவுறித்தியதாக "அவஸ்யக நில்யுக்தி"
என்னும் சமண நூல் கூறுகிறது.
முதற் பாகம் முற்றிற்று!
இரா. பானுகுமார்,
சென்னை.